×

மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 7,500 குடியிருப்புகளுக்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு

சென்னை:  மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 7500  குடியிருப்புகளுக்கான பணிகளை அதிகாரிகள் விரைவாக தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு வீடுகளை  வழங்க வேண்டும் என ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பணிகள், உட்கட்டமைப்பு பணிகள், உலக மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளின் நிதி உதவி திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விற்பனை பத்திரம், மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கு விற்பனை பத்திரம், புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது  நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலளர்   ஹித்தேஷ்குமார் மக்வானா, துறை இயக்குநர் கோவிந்த  ராவ், இணை இயக்குநர் சிவகிருஷ்ணமூர்த்தி,  வாரிய செயலாளர் பிரியதர்ஷினி, தலைமை பொறியாளர்கள் ராமசேதுபதி, ராஜசேகரன், சண்முகசுந்தரம், மோகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.  பின்னர், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மே.அன்பரசன் பேசியதாவது:

கடந்த ஆட்சி காலத்தில் பயனாளிகளையே தேர்ந்தெடுக்காமல் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு, அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களை கொண்டு தகுதியான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்து, ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்க உரிய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்துள்ளவாறு, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மழைகாலம் முடிந்தவுடன் மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைபெற்று வரும் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 7500 குடியிருப்புகளுக்கான பணிகளை விரைவாக தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும்.  

வாரியத்தால் கட்டப்படும் புதிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மூன்றாம் தரப்பு தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களாக அரசு பொறியியல் பல்கலைக்கழகங்கள்  மற்றும் அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போது இந்நிறுவனங்களை கொண்டு 18 திட்டப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வரும் காலங்களில் அனைத்து புதிய திட்டப் பகுதிகளிலும் அந்த ஆய்வு விரிவுபடுத்தப்படும்.

மழை காலங்களில் வாரிய திட்டப் பகுதிகளில் மழைநீர் தேங்காமலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினருடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இக்குடியிருப்புகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சமுதாய வளர்ச்சி பிரிவின் மூலம் தொழில்திறன் பயிற்சிகள், தொழில் தொடங்க நிதிஉதவிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Thamo Anparasan , Reconstruction Project, Housing, Officials, Minister Thamo Anparasan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...