×

மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு மாஜி ராணுவ கேப்டன் தற்கொலை: உத்தரகாண்டில் பயங்கரம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அடுத்த ராணிபோக்ரி பகுதியை சேர்ந்தவர் பிரிஜேஷ் கிரிஷாலி (58). இவர், இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடன் இவரது மனைவி குசும் (55) வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மூத்த மகன் கடற்பணியில் பணியாற்றி வருகிறார். மகள் பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவரது கிராமத்தில் ஸ்டேசனரி கடையை பிரிஜேஷ் கிரிஷாலி நடத்தி வந்தார். இந்நிலையில், பிரிஜேஷ் கிரிஷாலியின் வீட்டில் திடீரென துப்பாக்கிசூடு சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தம்பதியர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தகவலறிந்த போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி வட்டாட்சியர் ரிஷிகேஷ் கூறுகையில், ‘தம்பதியரின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரிஜேஷ் கிரிஷாலி தனது மனைவி யை இரண்டு முறை தலையில் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் அவரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பயன்படுத்திய துப்பாக்கியானது உரிமம் பெற்றது. முதற்கட்ட விசாரணையில் போக்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய பிரிஜேஷ், தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இவர்களது குடும்பத்தில் சொத்து பிரச்னை இருந்ததாக பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை’ என்றார்.


Tags : Uttarakhand , Former Army Captain Suicide After Shooting His Wife: Terror In Uttarakhand
× RELATED உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட...