சென்னை: மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்கு முறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டை இடிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய ரேடிசன் ப்ளு ரிசார்ட்டின் மனுவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ரேடிசன் ப்ளூ ரிசார்ட் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக எழுப்பியுள்ள கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மீனவர் நலச்சங்க தலைவர் செல்வ ராஜ்குமார் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஒப்புதல் இல்லாமலும் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று புகார் அளித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின்படி அனுமதி பெறாமல் மாமல்லபுரம் கடற்கரையில் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100.37 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட கட்டிடங்களை 2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.10 கோடியை இழப்பீடாக தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்யக் கோரி ரிசார்ட் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர்கள், கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்கவும் ரூ.10 கோடி இழப்பீடு நிர்ணயித்ததிலும் தவறில்லை என்றும், தீர்ப்பாய உத்தரவை மறு ஆய்வு செய்யவும் அவசியம் இல்லை எனக்கூறி மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….
The post விதிமீறி கட்டப்பட்ட ரிசார்ட்டை இடிக்கும் உத்தரவு : மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.