காரைக்கால்: காரைக்கால் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் கரை ஒதுங்கிய ராட்சத கப்பல் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டது. 2018 நவம்பர் மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கி ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியதோடு மக்களையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியது. அச்சமயம் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் காரைக்கால் துறைமுகத்திற்கு தூர்வார வந்த பலகோடி ரூபாய் மதிப்புடைய வீராபிரேம் என்ற அதிநவீன இயந்திரங்கள் கொண்ட தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் காரைக்கால் அருகே வடக்கு வாஞ்சூரில் தரை தட்டியது.
இதனை மீட்க பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியடைந்ததால் கப்பலை மீட்கும் பணி கைவிடப்பட்டது. இதனிடையே கடல் சீற்றத்தால் கப்பலின் அடி தளத்தில் ஓட்டை விழுந்து கடல் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கப்பலில் உள்ள உபகரணங்களை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வந்துள்ளனர். இந்நிலையில் 9,640 டன் எடை கொண்ட கப்பலை பாகங்களாக வெட்டி அதனை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அந்த பணி முழு வீச்சில் நடைபெற்று தற்போது கப்பல் முழுவதும் அங்கிருந்து வெட்டி அகற்றப்பட்டுள்ளது.