சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நவம்பர் 26 முதல் 28 வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பகுதி வாரியாக மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,000 ரூபாயும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,500 ரூபாயும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,500 ரூபாயும் கட்டணம் செலுத்தி அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.