×

நெடும்பலம்- ஓவர்குடி வங்க நகர் இடையே சேதமடைந்த இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அருகில் ஓவர்குடி வங்கநகர் இணைப்பு சாலை தார்சாலையாக கடந்த 2018 - 2019ல் போடப்பட்டு ஒன்றரையாண்டுகளில் முற்றிலும் சேதம் அடைந்தது. திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அருகில் ஒவர் குடியிலிருந்து வங்க நகர் செல்லும் சாலை வழியாக வங்கநகர், மாங்குடி, மருதவனம், குலமாணிக்கம், களப்பாள் வழியாக பரவாக்கோட்டை செல்லலாம்.

மேலும் இந்தபகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு குறுக்கு வழியாக விரைவாக வரலாம். இந் நிலையில் இந்த சாலை பொதுமக்கள் நடந்து கூட போக முடியாத அளவிற்கு சேதம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் நபார்டு திட்டத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கடந்த ஒன்றரையாண்டுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டது. மழை தொடங்கியதால் மீதமுள்ள சாலைபணி பாதியில் நிறுத்தப்பட்டது.

பின்னர் தார் சாலை போட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அப்போதே சாலைகளின் இருபுறமும் உள்வாங்கியது. போடாத சாலைகளில் கப்பி கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்து தற்போது சாலையில் பொது மக்கள் நடந்து செல்லவும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேதமான ஒவர்குடி வங்கநகர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வங்கநகர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ஓவர்குடி- வங்கநகர் இணைப்பு சாலை 2.4 கிலோமீட்டர் ரூ 2.61 கோடி நபார்டு வங்கி நிதி உதவியுடன் தார் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. தற்போது போட்ட தார்சாலையும் போடாத சாலையும் ஒரு மாதத்தில் சேதம் அடைந்து விட்டது. சாலையின் இருபுறமும் நீர்நிலைகள் இருப்பதால் சாலை அமைக்கும்போது தடுப்பு சுவர் அமைத்து சாலை போட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

இந்த சாலையை பேரிடர் பாதிப்பு திட்டத்தில் சேர்த்தால் தான் புதிய சாலை அமைக்க முடியும். பேரிடர் கால இழப்பில் சேர்த்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.

Tags : Alphabet ,Overkudi Bengal Nagar , Road
× RELATED வெயிலுக்கு வசதியும், விசாரணையும்...