கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றனர். இது தொடர்பாக போக்சோவில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கும் அன்னூர் பகுதியை சேர்ந்த விமான நிலையத்தில் தூய்மை பணிக்கான மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணக்குமார் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்போது சரவணகுமார் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி சரவணக்குமாரின் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சரவணக்குமாரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்: கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதான 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளி வளாகத்தில் விஷம் குடித்தார். மாணவிக்கு டார்ச்சர் அளித்த கூலி தொழிலாளி ராமர் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.