கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி கடந்த 12ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (35) பாலியல் தொந்தரவு தந்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் மீது மாணவி ஏற்கனவே புகார் அளித்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (45) என்பவரும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
அவர் தனக்கு ஜாமீன் கேட்டு கோவை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இறந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டது. இந்த வழக்கில் பாலியல் துன்புறுத்துதல் சம்மந்தமாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக இன்று கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மாணவியுடன் ஆசிரியர் மனைவி பேசிய ஆடியோ
கைதான மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி, மாணவியுடன் செல்போனில் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. ஆசிரியரின் மனைவியும் மாணவி படித்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுவதாக தெரிகிறது. ஆசிரியர் அந்த மாணவியிடம் நடந்த கொண்ட விதம், அவர் செய்த அத்துமீறல், பாலியல் டார்ச்சர் என அனைத்து விவரங்களும் அவர் மனைவிக்கு தெரிந்துவிட்டதை அந்த ஆடியோ உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.