பூந்தமல்லி: பாஜ தமிழகத்துக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் மத்திய பாஜ ஆட்சியின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து பாதயாத்திரையும், டெல்லியில் 18மாத விவசாயிகளின் போராட்ட வெற்றி கொண்டாட்ட பொதுக்கூட்டம் நேற்று திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. முன்னதாக, தேவி கருமாரியம்மன் கோயிலில் இருந்து ரதவீதிகள் வழியாக 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் பாதயாத்திரையாக வந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேசினார்.
கே.ஜெயக்குமார் எம்பி, துரை.சந்திரசேகர் எம்எல்ஏ, அருள் அன்பரசு, இமயா கக்கன் உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘‘சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடாமல் போனது கண்டிக்கத்தக்கது. தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை கிள்ளிக் கொடுக்காமல், மத்திய பாஜ அரசு அள்ளிக் கொடுக்க வேண்டும். பாஜ ஆளாத மாநிலம் என்பதால், தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.