×

14 வயது மாணவியை திருமணம்: போக்சோவில் இளைஞர் கைது

திருவள்ளூர்: 14 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்த 14 வயது மாணவி கடந்த 18ம் தேதி மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலிங்கம், எஸ்ஐ மாலா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள அனுமந்தபேட்டை கிராமத்தில் மாணவி இருப்பதாக கிடைத்த தகவல்படி, போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில்,’’தனது செல்போன் மூலம் 1 மாதத்துக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள அனுமந்தபேட்டை கிராமத்தை சேர்ந்த கோபி (21) என்ற கூலி தொழிலாளி அறிமுகமாகியுள்ளார். 2 பேரும் தினமும் செல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து அனுமந்தபேட்டை கிராமத்திற்கு சென்று கோபியை சந்தித்துள்ளார்.

 பின்னர் அவர்கள் கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக குடித்தனம் நடத்தியுள்ளனர்’ என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் மாணவியை மீட்டு, மாணவியை திருமணம் செய்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கோபியை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன்பிறகு மாணவிக்கு அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடத்தி, திருவள்ளூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Tags : Pokcho , Marriage of a 14-year-old student: Youth arrested in Pokcho
× RELATED கும்பகோணத்தில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது