×

அதிமுக-வை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும்!: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் அரசியலில் உருவாகும் புதிய புயல்...!!

சென்னை: அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியிருக்கிறார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், செங்கோட்டையன் தனது வலியுறுத்தலை முன்வைத்திருக்கிறார். வழிகாட்டு குழுவுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் பேசியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலர் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

எனினும் இந்த கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்துவது தொடர்பான குரல் எழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11ல் இருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் எனவும் வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கைக்கு மாவட்ட செயலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

மேலும் இந்த கூட்டத்தில் சிலர்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குழு தலைவராகவோ, அவைத் தலைவராகவே நியமிக்கலாம் என்று கூறினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கூட்டத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. அதிமுக செயற்குழு கூட்டத்தை வரும் டிசம்பர் மாதம் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : AIADMK ,Senkottayan , AIADMK, Steering Committee, Red Fort
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...