சிவகாசி : தொடர்மழை பெய்தும் சிவகாசி பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்தும், சிவகாசி பகுதியில் பெரும்பாலான கண்மாய்களுக்கு நீர் வராததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிவகாசியில் ஒன்றிய கட்டுப்பாட்டில் 15 சிறு பாசன கண்மாய்களும், 20 ஸ்தலபாசன கண்மாய்களும் உள்ளன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 11 கண்மாய்களும் உள்ளன. இந்த கண்மாய்களில் ஆனைக்குட்டத்தில் 2 கண்மாய்கள், செவலூரில் 2 கண்மாய்கள், திருத்தங்கல்லில் 2 கண்மாய்கள், புதுக்கோட்டையில் ஒரு கண்மாய் என மொத்தம் 7 கண்மாய்களுக்கு 50 சதவிகிதம் தண்ணீர் வந்துளள்து. குமிழங்குளம், நடையனேரி, எரிச்சநத்தம், கொத்தனேரி உட்பட பெரும்பாலான கண்மாய்களுக்கு 30 சதவிகிதம் தண்ணீர் மட்டுமே வந்துளளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில கண்மாய்களுக்கு 10 சதவிகிதம் தண்ணீர் கூட வரவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் கண்மாய்கள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.