×

பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவான திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்: கல்லூரியை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். அமமுக கட்சியின் அம்மா பேரவை மாநில இணைத்தலைவராக இருந்தார். திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் துணை நடிகராகவும் உள்ளார். இந்த கல்லூரியில் படிக்கும் 17 வயதான முதலாமாண்டு மாணவி, ஜோதிமுருகன் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி தாடிக்கொம்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தவறுக்கு உடந்தை, கொலை மிரட்டல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் தாளாளர் ஜோதிமுருகன், விடுதி காப்பாளர் அர்ச்சனா மீது வழக்குப்பதிந்தனர். இவர்களில் அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைமறைவான ஜோதிமுருகனை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் பெங்களூர், ஆந்திரா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு அவரை தேடி வந்தனர். கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன், நேற்று திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் ஜோதி முருகனுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 150க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

* மேலும் ஒரு மாணவி பாலியல் புகார்
ஜோதிமுருகன் மீது கடந்த 19ம் தேதி ஒரு மாணவி, 20ம் தேதி ஒரு மாணவி புகார் அளித்திருந்தனர். நேற்று முன்தினம் ஜோதி முருகனால் பாதிக்கப்பட்ட 18 வயதான மாணவி அளித்த புகாரின்பேரில், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 மாணவிகள் அளித்த புகாரின்பேரில் ஜோதி முருகன் மீது போக்சோ உட்பட 14 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


Tags : Dindigul Nursing College Governor's Court , Surrender in Dindigul Nursing College Governor's Court over sexual harassment: Govt
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...