சென்னை: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் வெளியிடப்பட்ட அறிக்கை: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்கலாம்.
அவர்களுடைய தொடர்பு விவரங்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் https://tnpcb.gov.in/contacy.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும்.