×

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்!: முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கை பதிவு செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து முழுமையான விவரங்களுடன் புதிய வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனரான வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்,  மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கைதிகள் தயாரித்த மருத்துவப் பொருட்கள், எழுது பொருட்கள், உறைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு காட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பொருட்களை லட்சங்களில் தயாரிக்கப்பட்டதாக கணக்கு காட்டி கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த மனுவில் புகார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்களை திரட்டியிருப்பதாகவும், முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டிஐஜிக்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகழேந்தி மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஆயிரக்கணக்கான உறைகள் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்றதற்கான ஆதாரங்கள் இல்லாமல், பொது வழக்காக தொடர முடியாது என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து சிறையில் நடந்திருக்கும் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


Tags : Madurai Central Jail ,iCourt , Madurai Central Jail, Corruption, ICC
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு