காரைக்குடி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘இந்திய நாட்டிற்கே வழிகாட்டுபவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதில் திமுகவின் பங்கும் உள்ளது. 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 95 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்றுள்ளோம். அதுபோலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது. ஒவ்வொரு தொண்டரும் களப்பணிக்கு தயாராக வேண்டும்’’ என்றார்.