×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தருவோருக்கு வெகுமதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தருவோருக்கு அரசு வெகுமதி அறிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை 2018 ஜூன் 25ல் அரசு விதித்தது. அதன்படி பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, டம்ளர், தர்மாகோள் கப்பு, பிளாஸ்டிக் தாளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், உரிஞ்சு குழல்களுக்கும் அரசு தடை விதித்திருந்தது. பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிப்பதும், சேமிப்பதும், விநியோகிப்பதும், விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிக்கும் உத்தரவை அமல்படுத்த பிளாஸ்டிக் உற்பத்தி மீதான தடை ஆணையை செயல்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புகார்கள் அடிப்படையில் பிளாஸ்டிக் ஆலைகளை கண்டறிந்து மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வது சட்ட விரோதமானது என கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழக அரசு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளது.

அதாவது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் https://tnpcb.in/contact/php என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை மின்னஞ்சல், கடிதம், வாட்ஸ்அப், தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.


Tags : Tamil Nadu , Plastic Material, Factories, Reward, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...