×

சேலத்தில் நிகழ்ந்த துயரம்: கேஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு..!!

சேலம்: சேலம் அருகே வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 மூதாட்டிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வரும் கோபி என்பவரது வீட்டில் இன்று காலை சமையல் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கோபியின் வீடு உள்ளிட்ட 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் 10 வயது சிறுமி உள்பட 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் கோபி 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தாய் ராஜலட்சுமி, அப்பகுதியில் குடியிருந்த தீயணைப்பு வீரர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவி உள்பட 5 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Salem , Salem, gas cylinder, 5 killed
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை