சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட பசுவபாளையம் கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 10 ஆடுகள், 3 நாய்கள் என தொடர்ந்து வேட்டையாடுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கலாமணி, மணி ஆகிய விவசாயிகளின் தோட்டத்துக்கு புகுந்து ஆட்டை அடித்து கொன்று பாதி உடல் சிதைந்த நிலையில் விட்டு சென்றுள்ளது. ஆட்டை காணவில்லை என தேடியபோது சிறுத்தை தாக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், சிறுத்தையால் விவசாயிகள் நிம்மதியிழந்துள்ளதாகவும் கால்நடைகளை கொல்லும் சிறுத்தையை பிடிக்கும்மாறு சிறுத்தையால் கொல்லப்பட்ட ஆட்டின் உடலை பண்ணாரி சாலை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பண்ணாரி, பவானிசாகர், பசுவபாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கபபட்டது. தகவலறிந்து வந்த டிஎஸ்பி ஜெயபாலன் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலையை மறியலை கைவிடுவோம் எனக்கூறி சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனச்சரக அலுவலர் சிவக்குமார், புதுப்பீர்கடவு திமுக ஊராட்சி தலைவர் முருகன் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் கிராமத்தையொட்டியுள்ள புற்கள் நிறைந்த பகுதியை சுத்தம் செய்து தருவதாக அளித்த வாக்குறுதியை அடுத்து சாலை மறியில் கைவிடப்பட்டது.