×

பெருந்துறை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்: உயிரியல் ஆசிரியர் கைது: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அப்பள்ளியின் உயிரியல் பாடப்பிரிவு ஆசிரியரான பெருந்துறை சுள்ளிபாளையம் கூட்டுறவு நகரை சேர்ந்த திருமலைமூர்த்தி (49) என்பவரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த ஆசிரியர் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவிகள் தலைமை ஆசிரியர் கணேசனிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு வெளியே சொல்லக்கூடாது என தலைமை ஆசிரியர் எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பள்ளியின் மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் நேற்று சீனாபுரம் மூன்று ரோடு சந்திப்பில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து, ‘‘சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும். அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கூறி கோஷங்கள் எழுப்பியதோடு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் கணேசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உடனடியாக உத்தரவிட்டார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags : Perundurai Government School , Perundurai, sexual harassment, biology teacher, arrested
× RELATED ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பள்ளி...