×

கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில் சோதனையிட நிறுத்தியபோது வேன் மோதி ஆய்வாளர் பலி: திட்டமிட்டு கொலையா? என விசாரணை

கரூர்: கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில் நேற்று காலை சோதனையிட மறித்த போது வேன் மோதியதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பரிதாபமாக இறந்தார். நிற்காமல் வேன் சென்றதால் திட்டமிட்டு வேனை ஏற்றி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் கனகராஜ் (56). அங்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிய இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கரூர் வையாபுரி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் கனகராஜ் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் கரூர்- திருச்சி பைபாஸ் சாலை, வெங்ககல் பட்டி மேம்பாலத்தின் கீழ் வழக்கம் போல் கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேனை சோதனையிட மறித்தபோது அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது பயங்கரமாக மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதில், கனகராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கனகராஜை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கனகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வாகன சோதனையின் போது திட்டமிட்டு வேன் ஏற்றி கனகராஜ் கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்திலும், நிற்காமல் சென்ற அந்த வேன் யாருடையது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குடும்பத்துக்கு 50 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் நா.கனகராஜ், நேற்று காலை கரூர் - திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியில் இருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகன ஆய்வாளர் பணியில் இருக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கனகராஜ் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியை கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கனகராஜ் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Karur-Trichy , Karur, police inspector
× RELATED கரூர் பைபாஸ் சாலை உள்வீரராக்கியம்...