டெல்லி: சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழகம் - கர்நாடகா மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சை தேர்வு செய்தது. கர்நாடகா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் அதிகபட்சமாக 46 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். பிரவீன் துபே 33 ரன் (25பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெகதீஷா சுசித், கருண் நாயர் தலா 18 ரன் எடுத்தனர். கேப்டன் மணிஷ் பாண்டே 13 ரன்னில் வெளியேறினார்.
தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் அள்ளினார். நடராஜன், சந்தீப் வாரியர், சஞ்ஜெய் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 20 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹரி நிஷாந்த் 23 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 9 ரன்னில் ஆட்டமிழக்க, தமிழகம் பின்னடைவை சந்தித்தது. கேப்டன் விஜய் சங்கர் 18 ரன், நாராயண் ஜெகதீசன் 41 ரன் (46 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி 16வது ஓவரின் முதல் 2 பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கர்நாடகா கை ஓங்கியது. கடைசி 3 ஓவரில் 36 ரன் தேவை என்ற நிலையில் சஞ்ஜெய், முகமது தலா 5 ரன்னில் வெளியேறியது தமிழக அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. 19வது ஓவரில் தமிழகத்துக்கு 14 ரன் கிடைக்க, பரபரப்பான கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டது.