சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தொண்டர்களுக்கு உத்தரவிட்டனர். அதன் ஒருபகுதியாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும் என கூட்டாக அறிவித்தனர். இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்நுழைவு வாயிலில் பெயர் பொறிக்கப்படும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், நேற்று அப்பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ என பெயர் சூட்டப்பட்டது.