கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பல்வேறு அணைகளும் நிரம்பி வருகின்றன. ஏரிகளின் கரைகள் உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துங்கபத்ரா நீர் தேக்கம் நிரம்பியதால் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலோர மாவட்டங்களான தக்ஷணா கன்னடா, உத்தர கன்னடா மற்றும் உடுப்பி ஆகியவற்றுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்தனர். 658 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை காரணமாக 8,495 வீடுகள் சேதமடைந்துள்ளன. 191 கால்நடைகள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பலரும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு உதவும்படி அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.