×

மக்களின் எதிர்ப்பை அடுத்து பிரதமர் அப்துல்லாவை மீண்டும் பதவியில் அமர்த்திய சூடான் ராணுவம் : அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் உறுதி!!

கெய்ரோ: சூடானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்துல்லா ஹாம்டோக்கை ராணுவம் மீண்டும் பணியில் அமர்த்தி இருக்கும் போதும் அமைதி அடையாத அந்நாட்டு மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 1989ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வந்த அதிபர் ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா். அந்த அரசை ராணுவம் கடந்த மாதம் 25ம் தேதி கலைத்தது. நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தியது.

பிரதமர் அப்தல்லா உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். ராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக சூடானில் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் ஒரே நாளில் 15 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ராணுவத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இதைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்துல்லாவை நேற்று மீண்டும் பதவியில் அமர்த்தி இருக்கும் ராணுவம், கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை ஒரு வாரத்தில் விடுவிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ராணுவத்தின் மறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த சூடான் மக்கள் ராணுவ ஆட்சி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் ஹாம்டோக் ராணுவத்தின் கைப்பாவையாகவும் மாறிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Tags : Abdullah , அப்துல்லா ஹாம்டோக்
× RELATED அவதூறு பரப்பினால் சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம்: எஸ்பி அறிவிப்பு