×

மேட்டூர் அருகே நடந்த லாரி டிரைவர் கொலையில் 17வயது சிறுவன் கைது: 5 பேரை மணந்த பெண்ணால் கொடூரம்

மேட்டூர்: மேட்டூரில் லாரி டிரைவர் கொலையில், 17வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே புதூர் பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல்(36). லாரி டிரைவர். திருமணமாகாத இவருக்கு, மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி அழகம்மாள்(40) என்பவருடன், ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கணவரை பிரிந்த அழகம்மாள், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, செல்லவேலுவுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு 7.30 மணியளவில், செல்லவேல் டூவீலரில் வெளியில் சென்றுள்ளார். மேல்காவிரி கிராஸ் பகுதியில் மேற்கு கரை கால்வாயில் சென்றபோது, அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு யாரும் இல்லாததை கண்டு திடுக்கிட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் தொடர்பாக அழகம்மாளிடம் துருவி துருவி விசாரித்தனர். இதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. அழகம்மாளுக்கு ஏற்கனவே சரவணன், வேலு, ஆறுமுகம், விக்கி என்ற 4 பேருடன் திருமணம் நடந்துள்ளது. இதில் சரவணனுடன் 3 குழந்தைகள் உள்ளனர். விக்கியுடன் குடும்பம் நடத்தி வந்த அழகம்மாள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரையும் பிரிந்துவந்து செல்லவேலுவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், செல்லவேலு ஓட்டி வந்த லாரியில் கிளீனராக பணியாற்றிய மேட்டூர் காவிரி கிராஸ் குண்டுகல்லூர் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுவனுடன், அழகம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்லவேலு இல்லாதபோது இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். தீபாவளிக்கு முதல் நாள், அழகம்மாள் சிறுவனுடன் படுக்கையறையில் ஒன்றாக இருந்ததை செல்லவேல் நேரில் பார்த்து விட்டார். பின்னர், இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் உனது பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனிடையே, தன்னை செல்லவேல் ஏதாவது செய்து விடுவாரோ என பயந்துபோன சிறுவன், செல்லவேலை நோட்டமிட்டு வழிமறித்து, கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 17வயது சிறுவனை, அவனது வீட்டில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

ஆனால், இந்த கொலையில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், சிறுவனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த சிறுவனிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலையுண்ட செல்லவேலின் டூவீலர், மேட்டூர் ஜெ.ஜெ.நகர் அருகே மேற்கு கரை கால்வாயில் மீட்கப்பட்டது. இந்த வழக்கில், இன்னும் சில நாட்களில் மேலும் ஓரிருவர் பிடிபடலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட சிறுவன் சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

Tags : Mettur , Mettur, truck driver, murder, boy arrested,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு