×

3 வேளாண் சட்டங்களையும் பார்லி. கூட்ட தொடரின் முதல் நாளிலேயே ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்.பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராச்சாமி உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த மூன்று  வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரிலும், அடக்குமுறையிலும் துணிச்சலாக  நின்று போராடி அச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர்  அறிவிப்பிற்குப் பின்னணியாக இருந்து உயிர் தியாகம் செய்த 700க்கும்  மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து  நின்று அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: ‘குறைந்த பட்ச ஆதார விலையே இல்லாத மூன்று வேளாண் சட்டங்களை முதலில் அவசரச் சட்டங்களாகவும், பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார்.  அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்துக்கு துவக்கத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றது திமுக.
வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மறுநாளே அந்தச் சட்டங்களை எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி  2020ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி  அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு  தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் அறிவித்து  நடைபெற்ற போராட்டத்தில் காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முழங்கினார். அனைத்துக் கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டு இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் 5.12.2020 அன்று கருப்புக் கொடி ஏந்தி திமுக தலைவர் போராட்டம் நடத்தினார். திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் 30.11.2020 அன்று கூட்டறிக்கை வெளியிட்டு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று 8.12.2020 அன்று அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறிவித்த நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்பது என்றும் அறிவித்து அவ்வாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய அளவில் 20க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து 9.12.2020 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து “மூன்று வேளாண் சட்டங்களையும் அரசை திரும்ப பெற அறிவுறுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தது. 18.12.2020 அன்று திமுக தலைவர் தலைமையில் அனைத்துக் கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத அறப்போராட்டம் இருந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது. பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் அப்படியொரு தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்தி 1.1.2021 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்றைய தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

அனைத்து கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பேசி அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினாலும் அச்சட்டங்களைத் திரும்ப பெறவில்லை என்பதால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 28.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக என வலியுறுத்தும் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதை இந்தக் கூட்டம் நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.

வழக்குகள், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, போராட்டத்திற்குள் காரை விட்டு கொன்றது என தங்கள் போராட்டத்தை நோக்கி வந்த அனைத்து அராஜகத்தையும்  கண் மூடித்தனமான அடக்குமுறைகளையும் முள் வேலிகளையும்  தைரியமாக எதிர்த்து நின்று  இந்திய விவசாயப் பெருங்குடி மக்கள் “அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு” பின்னால் நின்று, அவர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. அந்த ஆதரவு எதிர்கட்சியாக இருந்த போதும்  ஆளுங்கட்சியான பிறகும் தொடர்ந்தது. இந்நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமருக்கு விவசாயிகளின் பலத்தை உணர்த்தி இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பினை அறவழிப் போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

அறிவிப்பினை முன்னெடுத்துச் சென்று,  நாடாளுமன்றத்தின் வரும் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒன்றிய பாஜ அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Laws Barley ,DMK ,Chief Minister ,MK Stalin , Agricultural Laws, Barley. Meeting series, Chief Minister MK Stalin, DMK MP.
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...