திருத்துறைப்பூண்டி: திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து கச்சனம், ஆலத்தம்பாடி, பொன்னிரை, ஆலிவலம், ஆண்டாங்கரை, ஆலாத்தூர் வரையிலான வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று மாணவர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது. திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து கச்சனம், ஆலத்தம்பாடி, பொன்னிரை, ஆலிவலம், ஆண்டாங்கரை, ஆலாத்தூர் வரையிலான வழித்தடத்தில் அரசு பேருந்து இயங்கி வந்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயனடைந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பேரிடர் காலம் என்பதால் இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனை செல்பவர்கள் என பலரும் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். தற்போது கொரோனா பேரிடர் காலம் முடிந்து பள்ளி கல்லூரி திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் மேற்கண்ட வழித்தடத்தில் உடனடியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று திருவாரூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ஜெய்சங்கரிடம், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாணவர் பெருமன்றம் நிர்வாகிகள், தீபன்ராஜ், மணிகண்டன், செங்குட்டுவன், அபிமன்யூ ஆகியோர் மனு அளித்தனர்.