திருச்சி: புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டி சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது ஆடு திருடர்கள் சிலரை விரட்டி சென்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பள்ளத்துப்பட்டி பகுதியில் அவர்களை சுற்றி வளைத்த போது ஆடு திருடர்களுக்கு காவலருக்கு இடையே கலைக்களப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த மோதலில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பூமிநாதன் அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக காவலரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 2 டிஎஸ்பிக்கள், தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.