பூந்தமல்லி: மதுரவாயல் அருகே கஞ்சா போதையில் போலீசை தாக்கிய மாணவன் கைது செய்யப்பட்டார். தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் காவல் நிலைய முதல் நிலை காவலர் விக்னேஷ் (35), நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் பகுதியில் ரோந்து சென்றபோது, ஒரே பைக்கில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், காவலரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். அவர்களின் ஒருவனை விக்னேஷ் மடக்கி பிடித்தார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில், சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் பாசில் (19) என்பதும், கஞ்சா போதையில் காவலரை தாக்கியதும் தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தப்பிய பகவான், உஸ்மான் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.