தேனி: பெரியகுளம் அருகே ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவரின் மனைவி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹோமியோபதி கிளீனிக் நடத்தி வந்தவர் 50 வயதான சீனிவாசன்.
இவர் முறையாக பதிவுபெற்ற ஹோமியோபதி மருத்துவம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் அந்த பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென தூசாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் தற்கொலைக்கு தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் லட்சுமணன் தான் காரணம் என பெரியகுளம் போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.
மாதந்தோறும் ரூ.50,000 பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஹோமியோபதி மருத்துவர் தற்கொலைக்கு தூண்டியவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.