தவளக்குப்பம்: தவளக்குப்பம் அருகே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதியை கவர்னர், முதல்வர், சபாநாயகர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தவளக்குப்பம் அடுத்த என்.ஆர்.நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள இப்பகுதி வீடுகளை நேற்று காலை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்எல்ஏ., கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், வெள்ளநீரில் சிக்கிய மக்களை புதுவை தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு மூலம் மீட்டு, அருகில் உள்ள தனியார் பள்ளிமுகாமில் தங்க வைத்தனர். மேலும், அவர்களுக்கான உணவுகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், கனமழையால் பாதிக்கப்பட்ட என்.ஆர்.நகர் பகுதி மற்றும் வெள்ளநீரை உடைத்து வெளியேற்றும் முகப்பு பகுதிகளை பார்வையிட்டார். மேலும், அருகே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது சபாநாயகர் செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.