அருமனை : அருமனையை அடுத்த களியல் அருகே சிவலோகம் உள்ளது. இங்கு சிற்றாறு-2 அணையின் முகப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அரசு பள்ளி ஆகியவற்றின் குடிநீர் தேவைக்காக, கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அனுமதியுடன் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே பொதுப்பணித்துறையினரின் நடவடிக்கையால் அணைப்பகுதி முழுவதும் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன.
குடிநீர் கிணறு பொதுப்பணித்துறை பகுதியில் அமைந்துள்ளதால் மதில் சுவருக்குள் சிக்கி கொண்டது. இதனால் பொது மக்கள் கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்கும் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளியில் உணவு சமைத்தல் உள்பட தேவைகளுக்காக வேறு பகுதிகளில் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
காலகாலமாக அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அணையில் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.