×

திண்டுக்கல்லில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர்: தாளாளர் தலைமறைவு; வார்டன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியின் தாளாளராக ஜோதிமுருகன் இருந்து வருகிறார். இவர் அமமுக கட்சியின் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளராகவும் உள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிமுருகன், கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோரிடம் சொல்ல முடியாமல் மாணவி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தகவலறிந்த சக மாணவ, மாணவியர் தாளாளரை கைது செய்யக்கோரி, நேற்று கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமாதானம் செய்ய வந்த தாளாளர் ஜோதிமுருகனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அழகுபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், மாணவ, மாணவிகளை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள், திண்டுக்கல் - பழநி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன், சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், தாடிக்கொம்பு போலீசார், தாளாளர் ஜோதிமுருகன், உடந்தையாக இருந்ததாக விடுதி வார்டன் மற்றும் ஆசிரியையாக உள்ள பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா (25) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் அர்ச்சனா கைதானார். தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Dindigul ,Warden , Dindigul, College of Nursing, Student, Sexual Torturer, Warden Arrested
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...