×

வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி சொத்து சேர்த்ததாக புகார்: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

சென்னை: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்த புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவி காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்துள்ளார். சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பணிகளுக்கான டெண்டர்களை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதற்கான டெண்டர் வெளிப்படை சட்டத்தின் கீழ் உரிய விதிகள் பின்பற்றப்படாமல் விடப்பட்டுள்ளது. தனது குடும்பத்தார் பெயரில் நிலங்கள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் என 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் அவரது பினாமி பெயர்களில் சொத்துகள் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு இவர் தேர்தலின் போது, குறிப்பிட்ட சொத்துகளின் மதிப்பு 53 லட்சத்து 56 ஆயிரத்து 889 ஆகும். ஆனால், 2011 தேர்தலில் 26 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 790 ரூபாய் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைய படிவத்தில் சொத்துகளை கே.பி.அன்பழகன் மறைத்துள்ளார். அதனால், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்ய கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, எம்.பி.வைரக்கண்ணன் ஆஜராகினர். அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது. இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags : KP Anpalagan ,Court , Former Minister, KP Anpalagan, Corruption Eradication, Information
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...