×

இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி : வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து!!

டெல்லி : மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை தாம் வரவேற்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று காலை உரையாற்றினார்.அப்போது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை இன்று முதல் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப் பெற வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய அவர், வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு.வேளாண் சட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும்.குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் இடம்பெறுவர்.விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம், என்றார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்! உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்!அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Principal ,Stalin , முதல்வர் மு.க. ஸ்டாலின்
× RELATED கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்