×

ஓர் ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி... வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுகிறது மத்திய அரசு!!!

டெல்லி : டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்து இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

3 வேளாண் சட்டங்களும்

நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவை, மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர் போராட்டம்

இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஹரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 12 மாதத்தைத் தொட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.போராட்டத்திற்கு மத்தியில் விவசாயிகள் பலர் உயிர் நீத்த சோக சம்பவமும் அரங்கேறி உள்ளது.

வாபஸ் பெறுகிறது மத்திய அரசு

இந்த நிலையில் தான், வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்  சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Central Government , விவசாயிகள்
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...