கோவா: இந்திய கால்பந்து போட்டிகளில் முக்கியமான இடத்தை இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் பிடித்துள்ளது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ளன. நாடு முழுவதும் நடந்து வந்த ஐஎஸ்எல் கால்பந்து ஆட்டங்கள் கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக கோவாவில் மட்டும் நடத்தப்பட்டன. கூடவே ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கங்களில் நடந்தன. இந்த ஆண்டும் ஐஎஸ்எல் தொடர் கோவாவில் மட்டும் நடைபெறும். அங்குள்ள 3 அரங்கங்களில் நடைபெறும் ஆட்டங்களை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. இன்று இரவு தொடங்கும் முதல் ஆட்டத்தில் 3முறை சாம்பியன் ஏடிகே மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்சி தனது முதல் ஆட்டத்தில் நவ.22ம் தேதி எப்சி கோவாவை எதிர்கொள்கிறது.
ஆட்டங்கள் தினமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். மேலும் 2 ஆட்டங்கள் நடத்தப்படும் நாட்களில் 2வது ஆட்டம் இரவு 9.30 மணிக்கு தொடங்கப்படும். மொத்தம் 11 அணிகள் களம் காணும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் ரவுண்டு ராபின் முறையில் அடுத்த அணியுடன் தலா 2 முறை மோதும். இப்போது ஜன.9ம் தேதி வரையில் நடைபெற உள்ள முதல் சுற்றுக்கான ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக ஆடும் அணியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு முதல் 6லிருந்து 4ஆக குறைக்கப்பட்டுள்ளது.