×

ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் அட்டகாசம் 2 மணி நேரத்தில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு: சூப்பர் மார்க்கெட்கள் சூறை; காஞ்சிபுரம் மக்கள் பீதி

சென்னை: காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர், கம்போடியாவில் கடந்த 2017ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். அவரது மறைவுக்கு பிறகு, அவரை போல தாதாவாக வலம் வரவேண்டும் என அவரது கூட்டாளிகள் தணிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. இதனால் காஞ்சிபுரத்தில் தொடர் கொலைகள் அரங்கேறின. ஸ்ரீதரை போல அவரது கூட்டாளிகள் சமீபகாலமாக காஞ்சிபுரத்தில் தொழிலதிபர்கள், வசதி படைத்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு செல்போனில் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஸ்ரீராம் என்பவரிடம், ஸ்ரீதரின் கூட்டாளிகள் ஜெமினி, ஜெகன் உள்ளிட்டோர் லட்சக்கணக்கில் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், மாமூல் தராததால் அவர்கள், அரிவாளுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து ஊழியர்களை சரமாரி தாக்கி, கடையில் உள்ள பொருட்களை சூறையாடினர். முன்னதாக, ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டு பிரபுவின் வீட்டுக்கு சென்ற ரவுடி தினேஷ் கோஷ்டியினர், பிரபுவின் மகன்கள் கமலேஷ், ஜனார்த்தன் ஆகியோரை சரமாரி வெட்டினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பிறகு சாலை தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டை சூறையாடினர்.

தொடர்ந்து, சிறுவாக்கம் பகுதியில் ராஜமன்னார், வெங்கடேசன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். 2 மணி நேரத்தில் 4 பேரை ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா, விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பருத்திக்குன்றம், பல்லவர்மேடு, பொய்யாக்குளம், திருக்காலிமேடு, குண்டுகுளம் ஆகிய பகுதிகள் ரவுடிகளின் புகலிடமாக உள்ளது. இந்த பகுதிகளில் நடைபெறாத குற்ற சம்பவங்களே இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் கொலை, அடிதடி, சாராய விற்பனை என சட்ட விரோத சம்பவங்கள் தலை விரித்தாடுகின்றன. கோயில் நகரமான காஞ்சிபுரம் கொலை நகரமாக மாறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Rowdy Sreedhar , Rowdy Sreedhar's allies cut scythe for 4 in 2 hours: Supermarkets loot; Kanchipuram people panic
× RELATED காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்