சென்னை: தமிழகத்தில் 9வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தடுப்பூசி முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நவம்பர் மாத இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்கிற இலக்கை எட்ட பணி செய்து வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 4800 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு செவிலியர்கள் தேவை என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் பணி நியமனம் செய்யப்படும். மேலும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்குப் பின் நல்ல முடிவு எடுக்கப்படும்.