×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வருகையை தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள்: அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதையில் போலீஸ் குவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோயில் பிரகாரம் வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீப பெருவிழா நாளை நடைபெறுகிறது. அதையொட்டி, 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. வழக்கமாக தீபத்திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து 2வது ஆண்டாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைவிட, இந்த ஆண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வழக்கத்தைவிட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோயில் மட்டுமின்றி திருவண்ணாமலை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோயில் உட்பிரகாரங்கள் மற்றும் வெளிபிரகாரம், மாடவீதி, கிரிவலப்பாதை என அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு, திருவண்ணாமலையை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும், மாவட்ட எல்லைகளில் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும், இன்று அதிகாலை முதல் 11 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படுகிறது. அதோடு, பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி, நாளை (19ம் தேதி) 2.26 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்ப்பதற்காக, கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, 78 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.


Tags : Thiruvannamalai Karthika Fire Festival ,Annamalaiyar Temple ,Kiriwalapatha , Thiruvannamalai, Karthika Festival
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...