×

தர்மபுரி- சிவாடி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

தர்மபுரி: பெங்களூரு- சேலத்திற்கு தர்மபுரி வழியாக பயணிகள் ரயில், சரக்கு ரயில் தினசரி இயக்கப்படுகிறது. ஒருவழிப்பாதையாக இருப்பு பாதை செல்வதால், பல்வேறு சிரமங்களை ரயில்வே துறை அடிக்கடி சந்திக்கிறது. இதனால் ரயில்கள் வந்து சேரும் நேரம் தாமதமாகிறது. இதை தவிர்க்க மின்சார ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, பெங்களூருவில் இருந்து சேலம் வரை மின்சார ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மின்சார ரயில் இயக்க பணிகள் நடந்தது. அங்கு பணிகள் முடிந்து, மின்சார ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் முடிந்தது. இதையடுத்து, ஓசூர் -ராயக்கோட்டை ரயில்நிலையம் வரை மின்சார ரயில் இயக்க, மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து முடிந்து, சமீபத்தில் சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்பட்டது.

தொடர்ந்து, ராயக்கோட்டை- பாலக்கோடு வரை மின்சார ரயில் பணிகள் முடிந்து, இரு மாதத்திற்கு முன் சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில், பாலக்கோடு முதல் சிவாடி வரை, மின்சார ரயில் இயக்க பணிகள் முடிந்து, நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. பெங்களூரில் இருந்து பாலக்கோடு வந்து, தர்மபுரி ரயில்நிலையம் வழியாக, சிவாடிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் தலைமையில் அதிகாரிகள் 10 பெட்டிகளுடன் தனி மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் பார்த்தனர். பாலக்கோடு- தர்மபுரி வழியாக சிவாடிக்கு, 40 கிலோ மீட்டர் தூரம் ரயில் இயக்கப்பட்டது. மின்சார ரயில் சோதனை ஓட்டத்தால், தர்மபுரி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகிகாரிகள் கூறுகையில், ‘பாலக்கோடு -சிவாடி ரயில் நிலையம் வரை, மின்சார ரயில் இன்ஜினுடன் 10 பெட்டிகள் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. விரைவில் சிவாடி- ஓமலூர் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் இயக்கும் வகையில், மின் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதை தொடர்ந்து, பெங்களூர்- சேலம் வரை மின்சார ரயில் இயக்கப்படும். நேற்று நடந்த இந்த மின்சார ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது,’ என்றனர்.

Tags : Dharmapuri , Dharmapuri, electric train, test run
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி