×

கருவேப்பிலங்குறிச்சி அருகே இறந்தவரின் உடலை ஆற்று வெள்ளத்தை கடந்து தூக்கி செல்லும் அவலம்

விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தே.பவழங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரமங்கலம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை புதைப்பதற்கான சுடுகாடு இல்லாததால் அங்கு உள்ள வெள்ளாற்றில் புதைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில்  தற்போது மழை பெய்து  வெள்ளாற்றில் வெள்ளம் சென்றுகொண்டிருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த சங்கர்(60) என்பவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார். அப்போது ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் உடலை அடக்கம் செய்யமுடியாமல் ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள ஒரு இடத்திற்கு அவரது உறவினர்கள் பிரேதத்தை கொண்டு சென்றனர்.

அப்போது ஆற்றில் ஓடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து அக்கரைக்கு கொண்டு சென்ற சம்பவம் பார்ப்பவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, சுடுகாடு வசதி இல்லாத சூழ்நிலையில் இது போன்று பல ஆண்டுகளாக அவதியடைந்து வருகிறோம். சுடுகாடு வசதி கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு மயான வசதி செய்து தர வேண்டும், என்றனர்.


Tags : Karuvappilankurichi , karuvelankurinchi
× RELATED கருவேப்பிலங்குறிச்சி அருகே பரபரப்பு...