×

மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் விஸ்வரூபம்: பள்ளி மாணவிகளை மயக்கி முக்கிய விஐபிகளுக்கு சப்ளை?: காரைக்குடி போலீசார் தீவிர விசாரணை

காரைக்குடி: பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் அழகுநிலைய பொறுப்பாளரை தேடி வரும் நிலையில், மேலும் பல மாணவிகளை மயக்கி முக்கிய விஐபிகளுக்கு சப்ளை செய்தனரா என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு நடித்து பதிவிட்டு வந்துள்ளார். இதனை சக மாணவிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அப்போது தனக்கு அறிமுகமான பிளஸ் 2 படிக்கும் சக மாணவியை, தனது தாய் பணியாற்றும் அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அழகுநிலைய பொறுப்பாளராக இருந்த மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸிலுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் மாணவிகளுக்கு ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன் மது விருந்தும் அளித்துள்ளார். உச்சக்கட்ட போதையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், குரூப் ஸ்டடி என  இரவு நேரங்களில் வீட்டில் சொல்லி விட்டு வந்த மாணவிக்கு பலமுறை மது விருந்து அளித்து, மன்ஸில் பாலியல் அத்துமீறலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த மாணவியை, விக்னேஷ் என்பவர் மன்ஸில் அழைத்ததாக கூறி தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும், பள்ளிக்கு வருவதாக கூறிவிட்டு, மாணவிகள் அழகு நிலையத்திற்கு சென்று மன்ஸிலுடன் தனிமையில் இருந்துள்ளனர். மாணவிகள் தொடர்ந்து பல நாட்கள் விடுமுறை எடுத்தது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும், பெற்றோரை அழைத்து விசாரித்து மாணவிகளுக்கு டிசியை கொடுத்துள்ளனர். மேலும், மாணவிகளுடன் மிக நெருக்கமாக பழகி வந்த ஆசிரியை ஒருவரையும் பணிநீக்கம் செய்துள்ளனர். மேலும், மாணவிகளிடம் இருந்து கருமுட்டைகள் திருடப்படுவதாகவும் தகவல் பரவின. இதுகுறித்து கல்வித்துறை மற்றும் காவல்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதில் அழகு நிலைய பொறுப்பாளர் மன்ஸில், பெண் பணியாளர், அவரது பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகள், விக்னேஷ், சிரஞ்சீவி என 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் கைதான நிலையில் தப்பியோடிய மன்ஸிலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கைதான பெண் பணியாளரின் 17 வயது மகளின் காதலர், சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படையினர் விரைந்துள்ளனர். பணியாளரின் மகள் தன்னுடன் படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளை, அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் படித்த பள்ளியிலும், பல மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறி தவறான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாவும், இத்தகவல் அறிந்து அவரை பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து வெளியேற்றியதும் தெரிய வந்துள்ளது. அந்த பள்ளியோடு தற்போது படித்த பள்ளியிலும் அதே வேலையை செய்து வந்துள்ளார். பிரச்னைக்குள்ளான அழகு நிலையத்திற்கு முக்கிய விஐபிக்கள் அதிகளவில் வந்து சென்றுள்ளனர்.  இவர்கள் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மன்ஸில் கைதானால் பல முக்கிய விஐபிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்பி செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ அதற்கு உடந்தையாக இருந்தாலோ அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதிற்கு உட்பட்ட சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால் எந்தவித தயக்கமின்றி அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.  பெற்றோர் தங்கள் குழந்தைகளின் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை கண்காணிக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் சிறுமிகள் மற்றும் குடும்பத்தினரின் மனநிலையை காயப்படுத்தும்விதமாக மிகைப்படுத்தப்பட்ட நடக்காத நிகழ்வுகளை, உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைத்தளங்கள், எஸ்எம்எஸ் மூலம் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Viswaroopam ,Karaikudi , Karaikudi, student, sexual harassment, affair
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!