×

சென்னையில் டிசம்பர் மாத இறுதிக்குள் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை முதல்வர் தொடங்கி வைப்பார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: டிசம்பர் இறுதிக்குள் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை முதல்வர் சென்னையில் துவக்கி வைப்பார். 30லி கபசுரகுடிநீர், நிலவேம்புகுடிநீர், மழைக்கால நோய்களுக்கு தேவையான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று நடமாடும் சித்த மருத்துவ முகாம் வாகனங்களை துவக்கி வைத்த பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் வாகனங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கபசுரகுடிநீர் தயார் செய்யும் இடத்தினையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன், மருத்துவ நிலைய அதிகாரி உசைனி, டாக்டர் சாய் சதீஷ்குமார் மற்றும் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மழைவெள்ள பாதிப்புகளுக்கு பிறகு வரக்கூடிய நோய்களுக்கு தமிழ்நாடு முழுவதுமாக 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் டெங்கு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்டம் தோறும் தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திற்கு 3 மருத்துவர்கள் என 50 வாகனங்கள் 15 மண்டலங்களுக்கு சென்றுள்ளது. 30 லிட்டர் கபசுரகுடிநீர், 30 லிட்டர் நிலவேம்புகுடிநீர், மழைக்கால நோய்களுக்கு தேவையான மருந்துகளும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யும் சிலர் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை பணி செய்வதில்லை. பேரிடர் காலத்தில் பணி செய்வது கடினம் தான் நாங்களும் குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு சொல்லவில்லை நாங்களும் தாம் உழைக்கின்றோம்.நானே ஐ.சி.யு. வார்டுகளுக்கு சென்றேன். மழை கிராமங்களுக்கு சென்றுள்ளோம். பணி என்பது கடினம் தான் இருப்பினும் சிலர் சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். யாராக இருந்தாலும் கண்காணிக்கப் பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது பழிவாங்கும் நடவடிக்கைகயாக இருக்காது பணி செய்யவில்லை என்றால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் அகில இந்திய ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான நிறைவு பெற்றவுடன் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைகான கலந்தாய்வு நடைபெறும். 10.5 வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு தடையில்லை. மே 7க்கு பிறகு 100க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் இரு மையங்களை முதல்வரே துவக்கி வைத்தார். கொரோனா காலத்தில் மிகப்பெரிய உதவியாக இருந்தார்கள் அதே வகையில் டெங்கு மற்றும் மழைவெள்ள பாதிப்புக்கும் பணி செய்கிறார்கள். டிசம்பர் இறுதிக்குள் சித்த மருத்துவ பல்கலைகழகத்தை முதல்வர் சென்னையில் துவக்கி வைப்பார். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Chief Minister ,Siddha Medical University ,Chennai ,Minister ,Ma Subramanian , Chennai, December, Siddha Medical University, Minister Ma. Subramanian
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...