×

போராட்டங்களை கொச்சைப்படுத்தும் நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார்

சென்னை: போராட்ட வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்த நடிகர் சந்தானம் மற்றும் சபாபதி திரைப்பட இயக்குநர் சீனிவாசராவ் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் சந்தானம் நடித்து வெளிவர உள்ள ‘சபாபதி’ திரைப்படத்தின் விளம்பரம் இணையதளங்களில் வெளியானது. அதில், நடிகர் சந்தானம் ஒரு சுவற்றின் முன் சிறுநீர் கழிப்பது போலவும், அந்த சுவற்றில்‘தண்ணீர் திறந்தவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ளது.

மேலும், அந்த விளம்பரத்தில் நடிகர் சந்தானம் ஒரு பொது சுவற்றில் சிறுநீர் கழிப்பது போல் வெளியிட்டிருப்பது சட்டப்படி பொது இடங்களில் அநாகரீகமான முறையில் நோய் தொற்று பரப்பும் வகையிலும், அசுத்தமான செயலில் ஈடுபடுதல் என்பது சட்டப்படி குற்றமாகும். நடிகர் சந்தானம் போன்ற கதாநாயகன் இது போன்ற செயல் செய்வதாக காட்சிப்படுத்துவது என்பது மற்ற பொது மக்களுக்கு இது போன்ற செயல்களில் ஈடுபட ஊக்குவித்தல் ஆகும். ஆகவே போராட்ட வழிமுறைகளை கொச்சைப்படுத்தியும், பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் மற்றும் இந்த செயலை திரைப்படம் போன்ற வலிய காட்சி ஊடகம் மூலம் காட்சிப்படுத்தியதால் பொதுமக்களையும் இதுபோன்ற செயலுக்கு ஊக்கப்படுத்தும். எனவே நடிகர் சந்தானம் மற்றும் சபாபதி பட இயக்குநர் சீனிவாசராவ் மீது ஐபிசி 268,269, 290 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Santhanam ,Periyar Dravidar Kazhagam , Struggles, Actor Santhanam, Action, Periyar Dravidar Kazhagam
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து பஸ்-பைக் மோதல் கூலித்தொழிலாளி பரிதாப பலி