சென்னை: சென்னையில் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை நாட்டிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட எக்மோ பிரிவை கொண்டுள்ளது. அதன் மூலம் கடந்த 2010ம் ஆண்டு முதல் 270க்கும் அதிகமான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது. விஷம் அருந்துதல், மயக்கம், பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்று, அண்மையில் உறுப்பு மாற்றம் செய்து கொண்ட மற்றும் செய்துகொள்ள உள்ள நோயாளிகள், கொரோனா போன்ற பல்வேறு பட்ட சூழல்நிலைகளில் எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
உலகில் உள்ள சிறந்த பிரிவுகளுக்கு இணையாக பலன்களை வழங்கக் கூடிய வகையில், ஒரு சிறப்பான எக்கோ பிரிவை நிறுவ வேண்டுமானால், மருத்துவம், நர்சிங், பெர்ஃப்யூஷன் தொழில்நுட்பம் மட்டுமின்றி, நிர்வாகம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் ஒன்றாக இணைய வேண்டும். இது மிகவும் தேவையான நேரத்தில் கைக்கூடியது என்பது மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது. பொதுவாக, எக்மோவின் சராசரி காலகட்டம் என்பது நோயாளி டிஸ்சார்ஜ் ஆவதற்கு 60 நாட்களுக்கு முன்பு ஆகும். தற்போது நோயாளிகளின் உயிர் பிழைப்பு விகிதம் (6 மாதங்களில்) எக்மோவை பொறுத்தவரையில் 73.9 சதவீதம் வரை உள்ளது. இது உலக சராசரியான 40-50 சதவீதத்தை காட்டிலும் கூடுதலாகும்.
கொரோனா இரண்டாம் அலையின் போது டெல்டா வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டு எக்மோவில் வைக்கப்பட்டிருந்த 23 பேரில், 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவருக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2 பேர் எக்மோவில் இருந்து வெளியே வந்துள்ளதுடன் மறு சிகிச்சையும் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.