சென்னை: உலகப் புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை திரைப்படமாவதாக அவ்வப்போது தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது இத்தகவலை விஸ்வநாதன் ஆனந்த் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து நேற்று அவர் கொல்கத்தாவில் அளித்த பேட்டி: என் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து திரைப்படமாக உருவாக்க அனுமதி அளித்துள்ளேன். என் வாழ்க்கை சம்பவங்கள் முழுவதையும் தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டேன். திரைக்கதை எழுதும் பணி விரைவில் தொடங்குகிறது. கொரோனா காரணமாக வேலை தடைபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இதர விவரங்கள் வெளியாகும். என் வாழ்க்கை திரைப்படமாக வெளியாகும்போது, செஸ் விளையாட்டு வீரர்கள் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கூற்று பொய்யாகும். எனது கேரக்டரில் அமீர்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என் ஆசையை தெரிவித்துள்ளேன். ஆனால், யார் நடிப்பார் என்று தெரியவில்லை. தற்போது நான் ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. வரும் 24ம் தேதி தொடங்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நானும் ஒரு வர்ணனையாளராக பணியாற்றுகிறேன்.