உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கூடலூர் அருகே சுக்காங்கல்பட்டியை சேர்ந்தவர் மதன் (38). மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். கொலை வழக்கில் குற்றச்சாட்டு உள்ளதால், பார் கவுன்சில் இவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. நேற்று உத்தமபாளையம் கோர்ட்டுக்கு செல்ல, மதன் தனது டூவீலரில் கோம்பையை சேர்ந்த ஆண்டவரை ஏற்றிக்கொண்டு சென்றார். இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள், உத்தமபாளையம் ஆர்டிஓ குடியிருப்பு நெடுஞ்சாலையில் சென்றபோது மதனின் டூவீலர் மீது மோதினர்.
இதில் மதன், ஆண்டவர் கீழே விழுந்தனர். பின்பு காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், மதனை கோடாரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மதனை, அங்கிருந்த சிலர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மதன் இறந்து விட்டதாக கூறினர். மதன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முடிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், உத்தமபாளையத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இதில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்தாண்டு வக்கீல் ரஞ்சித்குமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2வது குற்றவாளியாக மதன் சேர்க்கப்பட்டு, கைதாகி ஜாமீனில் வந்துள்ளார். அதே பாணியில் தற்போதும் கொலை நடந்துள்ளதால், பழிக்குப்பழியாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.