×

வாணியம்பாடியில் பரிதாபம் சொத்து தராததால் 3 மகன்களால் நடுரோட்டில் விடப்பட்ட மூதாட்டி: தற்கொலைக்கு முயன்றவரை ஆட்டோ டிரைவர்கள் மீட்டனர்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சியை  சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ரஞ்சிதம்(85) இவர்களுக்கு 3 மகன்கள். ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ரஞ்சிதத்தின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் ரஞ்சிதத்தின் பெயரில் இருக்கும் சொத்துகளை பிரித்து கொடுக்கும்படி 3 மகன்களும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், சொத்துகளை எழுதி கொடுத்தால், தன்னை கைவிட்டுவிடுவார்கள் என்று ரஞ்சிதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகன்கள் 3 பேரும் சேர்ந்து நேற்று ரஞ்சிதத்தை  வாணியம்பாடி எல்.ஐ.சி அலுவலகம் முன் உள்ள பாலத்தில் விட்டு சென்றுள்ளனர். இதனால் வேதனையடைந்த ரஞ்சிதம் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் ரஞ்சிதத்தை மீட்டு விசாரித்தனர். மகன்கள் கைவிட்ட விவரம் தெரிந்து, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மகன்களுக்கு தெரிவித்தனர். ஆனால், அவர்கள் யாரும் வராததால் வாணியம்பாடி நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரது மகள் வயிற்று பேரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து அவர் பைக்கில் வந்து அழைத்துச் சென்றார்.

* சொத்துக்காக தாயை கொல்ல முயன்ற மகள் கைது
கோவை கணபதி அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (எ) சின்ன ராமாத்தாள் (75). கணவர் இறந்துவிட்டார். ஜோதிமணி (45) என்ற மகள் உள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து தாயுடன் வசிக்கிறார். பாப்பாத்திக்கு சொந்தமான இடம் நீலாம்பூர் பகுதியில் உள்ளது. சொத்து பத்திரங்களை கேட்டும் கொடுக்காததால் தாயை கொல்ல முடிவு செய்து சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த பாப்பாத்தி முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியுள்ளார். அவர் திமிறி பொருட்களை தட்டிவிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் குழந்தைகள் எழுந்து வந்து தடுத்தனர். ஆனாலும் விடாமல் கல்லை எடுத்து தாயின் காலில் போட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் வந்து பாப்பாத்தியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஜோதிமணியை கைது செய்தனர்.

Tags : Vaniyambadi , An old woman left in the middle of the road by her 3 sons for not giving her miserable property in Vaniyambadi: Auto drivers rescue a person who tried to commit suicide
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...